Saturday, 6 August 2011

மனப் பூனை

 பதுங்கியிருத்தல், பாய்ந்து ஓடுதலை எல்லாம் பூனை மறந்திருக்கவேண்டும்..
இல்லை,
படைக்கும் போது அவற்றை நான் கலக்க மறந்ததுதான் உண்மை.

அது எழுதப்படாதிருந்த சொற்கள் கொண்டு படைக்கப்பட்ட பூனை

சோர்வின் மிகையினை, அதன் தகிப்பினைக் கூட
சகித்துக்கொள்ள முடியாது நோயுறுகிறது

செயல்கள் அற்று 'அமைதி' யாயிருந்தது இறுகிய 'மௌனமாகி'விடுகிறது.

பூனையின் புண்களுக்குள்ளிருந்து புழுப்புழுவாக நெளிந்துகொண்டிருக்கிறது ஆர்வம்

அது எப்படியும் இறந்து விடும்

எழுதப்படாத சொற்களைத்தின்னவோ மனப்பிறழ்வால் அவதியுறவோ இன்னொரு பூனையைப் படைத்தலும் சாத்தியமில்லை.

செயலற்றிருத்தல்???

இனி எழுத்தோடு சங்கமிக்கலாம்
பேசாமல் பூனையைப் புதைத்த இடத்தை வணங்கத் தொடங்கலாம்