Saturday, January 23, 2010

உன்னோடு பயணித்தல்

பச்சை பச்சையான துகள்களாய்
இடைவெளியேயற்றுப் படர்ந்து கிடக்கிறது
மலைமேல் உன் புன்னகை

மழை விழுந்து
மங்கலான கண்ணாடியின் வழியே
நனைந்த மரங்களாகவும்
மலையுச்சிகளாகவும்
கொடுகிப்போய் குந்திக்கொண்டிருக்கிற
பூனையொன்றாகவும் மாறி மாறி
புன்னகையின் காட்சிகள் அழிந்து கொண்டேயிருக்கின்றன.

எனது பயணத்தைவிடவும் மிக வேகமாக
நீ உன்னை அழித்தழித்து வரைந்த வண்ணமிருக்கிறாய்

காதுக்குள் மாட்டியிருக்கிற ஒரு நாடோடியின் கிட்டார்
தனது நரம்பு முழுவதும்
காதலைப் பூசிக்கொண்டு
என்னைப் பரவசப்படுத்துகிறது.

பயண முடிவில்
என்னுடைய காதலாகிய நீ
இரண்டு துளி கண்ணீராகவும்
என் நரம்பு முழுவதும் பரவசமாகவும் ஓடியிருந்தாய்.

1 கருத்துக்கள்:

நிந்தவூர் ஷிப்லி said...

Dear,

Nice poem,,,nice expressions..good luck

Shibly FHA