Monday, September 6, 2010

மரணங்களை எழுதுதல் (கவிதையொன்றை வடிவமைத்தல்)

என்னை நிராகரித்து விட்ட இரவொன்றின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறேன்.
அது இயலாமையின் விளிம்புமாதலால் கவிதையொன்றினை வடிவமைப்பது மட்டுமே இப்போது சாத்தியம்.

மூச்சினை இழுப்பதற்கும் விட்டுவிடுவதற்குமிடையில்
மரணம் விதிக்கப்பட்டிருக்கிறதாம்.
ஹா..ஹா..ஹா...

எல்லாமே மரணமும் பின் புத்துயிர்ப்புமாகவே சுழலும் உலகத்தில் காலில்லாத உயிரிகள் கதையளந்துகொண்டிருக்கின்றன.

இது கவிதையற்ற வேறெதுவுமாக வடிவமைந்து விடக்கூடாதாவென்னும்
ஏக்கம் என்னை பதற்றப்படுத்திக்கொண்டிருக்கிறது.

மனம் அடிக்கடி Cool என்கிறது.

மரணங்கள் எனக்குள் பல எதிர்வினைகளை ஆற்றும்

கொலைகள், குண்டு வெடிப்புக்கள் வேறு வகையில் எனக்குள் நடுக்கந்தரும்.

I count myself too innocent என்று சொல்வதில் நான் தயங்குவது கிடையாது.
அது ஆளுமையற்றதும் கிடையாது என்று நம்புகிறேன்.

நிராகரிக்கின்ற இரவுகளைப் பழிவாங்கும் எனது புதிய உத்திதான்
இவ்வாறு கவிதைகளை வடிவமைக்கத் தொடங்குவது.
இதோ..இதை எழுதி முடிக்கின்ற போதும் கூட
நேற்றைய அந்த மரணச் செய்தி ஒரு நல்ல பகிர்வாக மரணித்திருக்கிறது.

இரவோ அடையாளமேயின்றி அழிந்து போகிறது.

இன்னொரு நாள், இன்னொரு காலை, இன்னொரு நான்