Saturday, 21 April 2012

தம்புள்ளை பள்ளிவாயல் அத்துமீறல்: கண்டிக்கப்படவேண்டிய மதஉரிமை மீறலும், பௌத்த அடிப்படைவாதமும்

இலங்கையின் தம்புள்ளை நகரில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் மீது 20/04/2012 அன்று (வெள்ளிக்கிழமை ) சிங்கள மதத் தீவிரவாத பிக்குகளின் தலைமையில் தாக்குதல் நடாத்தப்பட்டது குறித்த பல்வேறு தொடர் செய்திகளை நாம் தொடர்ந்தும் வாசகர்களுக்குப் பிரசுரித்து வருகின்றோம்.
வெள்ளிக்கிழமை 20/04/2012 அன்று காலை ஐம்பதிற்கும் அதிகமான பௌத்த பிக்குகளின் தலைமையில் ஐநூறுக்கும் அதிகமான ஆயுததாரிகளோடு சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்ற பள்ளிவாயலை அனைவருமாகச் சேர்ந்து தாக்க முற்பட்டிருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமையாதலால் தமது வாராந்த தொழுகையினை முன்னெடுப்பதற்குப் பள்ளிவாயலுக்குள் கூடியிருந்த முஸ்லிம்களால் தமது தொழுகை வணக்கத்தினை மேற்கொள்ள முடியாது போனதோடு அவர்களது உயிர்களும் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் பள்ளிவாயல் பிரதேசத்துக்க வந்த இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரும் நிர்வாகத்துறை அதிகாரிகளும் அந்தப் பள்ளிவாயலை விட்டு உடனடியாக முஸ்லிம்கள் வெளியேறுவது மட்டும்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமென்றும் அவ்வாறு வெளியேறாத பட்சத்தில் கூடியிருக்கும் சிங்கள ஆயுததாரிகளை எதிர்த்து பள்ளிவாயிலுக்குள் அச்சுறுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தமது தொழுகை வணக்கத்தினை நிறைவேற்ற முடியாத நிலையில் முஸ்லிம் மக்கள் அப்பள்ளிவாயிலை விட்டும் வெளியேறியுள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து பள்ளிவாயலுக்குள் அத்து மீறிய பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த அடிப்படைவாதக் கட்சிகளில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச நிர்வாகத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட சிங்கள ஆயுத தாரிகள் பள்ளிவாயலைத் தாக்கி சேதமாக்கியிருக்கின்றனர்.
இன்று சனிக்கிழமை 21/04/2012 அன்று ஏதோ ஓரிரு முஸ்லிம் அமைச்சர்களின் சொந்தத் தலையீட்டோடு ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தோ எதுவித அறிக்கையோ
எதிர்காலப் பாதுகாப்போ இப்பள்ளிவாயலுக்கும் தம்புள்ளை முஸ்லிம் மக்களுக்கம் வழங்கப்படாத நிலையில் பள்ளிவாயல் திறக்கப்பட்டிருக்கிறது.
இதுதான் இச்சம்பவம் பற்றிய ஆதாரபூர்வமான விவரணச் சுருக்கம்.
இச்சம்பவம் குறித்து மிகவும் ஆவேசப்பட்ட, நிதானமான, உதிரியான பல கண்டன அறிக்கைகள் பல்வேறு முஸ்லிம் தரப்புக்களிடமிருந்தும் அரசியல்சார், அரசியல் சாராத அமைப்புக்களிடமிருந்தும் இலங்கையின் ஏனைய சிறுபான்மைக் குழுக்களிடமிருந்தும் வெளிவந்திருக்கின்றன.
இருந்த போதிலும் இலங்கை என்பது அனைவருக்குமான நாடு என்கின்ற ஜனநாயக நம்பிக்கையினைத் தருகின்ற அரசியல் யாப்பினையும், அவ் யாப்பின்படி இதில் வாழுகின்ற அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு அரச நிறுவனங்களினால் பாதுகாக்கப்பட்டிருப்பதையும் மாத்திரம் கவனத்தில் கொண்டு இவ்வறிக்கையினூடாக மூன்று முக்கியமான அவதானங்களை முஸ்லிம் சீ என் பொறுப்புடன் வெளியிடுகிறது.
முதலாவது:
இலங்கையென்பது சிங்கள மொழிபேசுகின்றவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் அதே நேரம் சிங்கள மொழி பேசுகின்ற மக்களிடையே பெரும்பான்மையானவர்கள் பின்பற்றுகின்ற மதமே பௌத்தமாகும்.
இலங்கையில் பௌத்தத்தினைப் பின்பற்றுகின்ற மக்களுக்கிருக்கின்ற அதேயளவான அனைத்து சமவுரிமைகளும், அவற்றுக்கான அரச பாதுகாப்பும் ஏனைய எல்லாச் சிறுபான்மை மத நம்பிக்கையாளர்களுக்கும் இலங்கையின் ஜனநாயக அரசியலமைப்பின்படி உரித்துடையதாகும்.
இந்த அடிப்படையோடு இந்த தம்புள்ளைப் பள்ளிவாயல் சம்பவத்தை நோக்கும்போது  இதன் பின்னணியில் பல்லின கலாசார பண்பாட்டு ஜனநாயக விழுமியங்களை முற்றாக மறுக்கின்ற வகையிலான ஒரு குறிப்பிட்ட மதத்தின்மீதிருக்கம் அடிப்படைவாத மற்றும் குறுந்தேசியவாதப் போக்கின் வன்முறை வடிவத்தினையேதான் காண முடிகிறது.
இச்சம்பவமானது முழுக்க முழுக்க பௌத்த பிக்குகளால் வழிநடாத்தப்பட்ட தீவிரவாத முன்னெடுப்பு என்பது தெளிவான உண்மையென்றாலும இதை மாத்திரம் கொண்டு முழு பௌத்த மத நம்பிக்கையாளர்களையும் இதே மனநிலை கொண்ட அடிப்படைவாதிகளாகப் பார்க்க முடியாதென்பதில் முஸ்லிம் சீ என் தெளிவாகவிருக்கின்ற அதே நேரம் இந்தப் பள்ளிவாயிலில் தொழுவதற்கிருக்கின்ற முஸ்லிம் மக்களின் மத உரிமை ஆயுத முனையில் மறுக்கப்பட்டபோது அதற்கான பாதுகாப்பை அரச பாதுகாப்புப் பிரிவு வழங்குவதற்கு மறுத்தமையினையே முஸ்லிம் சீ என் கேள்விக்குள்ளாக்குகிறது.
நாட்டின் அனைத்து மக்களின் அனைத்து உரிமைகளுக்கம் அவற்றின் பாதுகாப்புக்குமபொறுப்பாயிருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வுரிமை மீறல் மற்றும் மத அசௌகரியம் குறித்தும் அரச படையினரின் ஏற்றுக்கொள்ள முடியாத பக்கச்சார்பான நடைமுறைக்கும்  ஜனநாயக முறையில் பொறுப்புக் கூற வேண்டிவர் என்பதில் நாம் உறுதியாகவிருக்கிறோம்.
ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சிங்கள மொழி பேசுகின்றவர்கள் என்பதோ, இலங்கையின் பெரும்பான்மையான பௌத்த மதமே ஆட்சியிலிருக்கின்றது என்பதோ இலங்கையில் வாழும் இன்னொரு சமுகத்தின் மத நம்பிக்கைக்கோ அல்லது அதற்கிருக்கின்ற தார்மீக உரிமைக்கோவெதிராக இலகுவாக அத்துமீறிவிடலாமென்கின்ற மதக் கடும்போக்குவாத மனநிலை வன்மையாகக் கண்டிக்கபபடவேண்டியதோடு ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற சிறுகுழுக்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியதும் இந்தாட்டு சட்ட சிர்வாக நீதித்துறைகளின் காவலர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கடமையேயாகும்.
இரண்டாவது:
இலங்கையில் யுத்தகாலத்திலிருந்து அழிக்கப்பட்டு வருகின்ற இந்து மற்றும் முஸ்லிம் வழிபாட்டிடங்களும் அவற்றின் தொன்ம வரலாறும் இந்நிகழ்வையும் பௌத்த ஆதிக்கவாதத்தின் தொடர் நிகழ்வாகவே அவதானிக்க வைக்கிறது.
பல்லின மக்கள் வாழுகின்ற நாடென்பதே இலங்கையின் வரலாற்றை அலங்கரிக்கின்ற முக்கியமான கருப்பொருளாகவிருக்கின்ற அதே நேரம் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிக்குள் முஸ்லிம்களினதும் இந்துக்களினதும் வரலாற்றுச் சுவடுகளாக நிலைத்திருந்த கோயில் பிரதேசங்கள், நூலகங்கள், பள்ளிவாயல்கள், தர்காக்கள் போன்றவை தெளிவாகவே சிங்கள மத அடிப்படைவாதிகளாலும் அரச ஆயுததாரிகளாலும் அழிக்கப்பட்டு வந்திருந்தும் அது பற்றிய எந்த அரச நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படாது புறக்கணிக்கப்படுவதும் ஆளும் அரசாங்கத்தின் ஜனநாயகத் தன்மையையும் சமவுரிமைத் தத்துவத்தையுமே சந்தேகிக்கச் செய்கிறது.
ஆதற்கான மிகத் தெளிவான இன்னுமொரு சான்றினையே இந்த தம்புள்ளைப் பள்ளிவாயல் சம்பவத்துக்கான காரணத்தை பீ பீ சீ தமிழோசை நிருபர் கேட்டபோது இக்கலவரக் கும்பலுக்குத் தலைமை தாங்கிய பிக்குகளில் ஒருவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
“தலைக்கு மேலால் காகங்கள் பறப்பதை அனுமதிக்கலாம், ஆனால் எங்கள் தலைகளில்; நிரந்தரமாகக் கூடு கட்டி வாழ விடமாட்டோம், இது பௌத்த நாடு, இதனைச் சுத்தப்படுத்த வேண்டும்”
மிகத்தெளிவான  மதத் தீவிரவாதத்தை விதைக்கின்ற இத்தயைதொரு பௌத்த மதகுருவின் வார்த்ததைகள் ஜனநாய நாடொன்றில் பயங்கரவாதக் குற்றத்துக்கு ஒப்பானது என்பதும் ஜனநாயக சோசலிச நாட்டில் இத்தகைய முன்னெடுப்புக்கள் ஆளும் அரசாங்கததரப்பினால் கண்டிக்கப்படவேண்டியதுமாகும்.
மூன்றாவது:
இந்தச் சம்பவம் குறித்த மிக உதிரியானதும் தமது இருப்புக்கு ஆபத்து வந்துவிடாதவகையிலுமான  ராஜதந்திர அறிக்கைகள் மாத்திரமே முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்த வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் இருப்புக்கு பக்கபலமான பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மந்திரிசபை அமைச்சர்களாகவும் அதிகமான முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தும் கூட மீறப்பட்டிருக்கின்ற உரிமைக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ பாதிக்கப்பட்டு தொழுகை மறுக்கப்பட்ட மக்களுக்கான நீதி ஏற்பாடுகள் குறித்தோ அல்லது உடைத்து சேதப்படுத்தப்பட்டிருக்கின்ற தம்புள்ளைப் பள்ளிவாயல் குறித்தோ இதுவரைக்கும் முஸ்லிம் மக்களுக்கோ உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய தரப்புக்கோ அவர்கள் எந்தவொரு பொறுப்புவாய்ந்த செய்தியினையும் வெளியிடாது மௌனமாயிருப்பது கண்டிக்கத்தக்கது.
தெளிவாகவே அத்துமீறப்பட்டிருக்கின்ற ஒரு சமுகத்தின் மதவுரிமைக்கு காலந்தாழ்த்திய போலி நியாயங்கள் உரிய நீதியாக அமையமாட்டாது.
அரசியலமைப்புப் பாதுகாப்பளிக்கும் சிறுபான்மையின மக்களின் இத்தகைய உரிமைகள் மீறப்படுகின்ற நிகழ்வுகளுக்க அவ்வாறு காலந்தாழ்த்திய இழுத்தடிப்புக்களால் நீதி கிடைக்காமல் போவதே இலங்கை அரசியல் வரலாற்றில் இன்றுவரை நாம் கண்டுவருகின்ற உண்மையுமாகும்.
இருப்பினும் இலங்கையில் யுத்தத்துக்குப் பிறான அமைதியான வாழ்வு பற்றி சர்வதேசத்துக்கு ஒரு பெரும் பிரமையினை உருவாக்கிவரும் அதே நேரம் இத்தகைய பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்புள்ள ஆளும் அரசாங்கமும் அதன் தலைவரும் உடனடியாக நீதியைப் பெற்றுத்தருகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய சிறுபான்மை மீதான ஆதிக்கவாத மத அடிப்படைவாத அத்துமீறல்களிலிருந்து சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் முஸ்லிம் சீ என் சம்பந்தப்பட் அனைத்துத் தரப்பினரையும் கோருகிறது.
அதே நேரம் பாதிக்கப்பட்டிருக்கின்ற தம்புள்ளை முஸ்லிம் மக்களுக்க இவ்விடயம் தொடர்பில் நீதிகிடைப்பதற்கும் இப்பள்ளிவாயிலுக்கான நிரந்தரமான அரசபாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் நியாயமானதும் அமைதியானதுமான தீர்வு கிடைக்கவும் எம்மோடு கைகோர்க்குமாறு இலங்கையின் அனைத்து அரசியல் சார் சாரா அமைப்புக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இணையத்தளங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.


muslimcn.net இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது 

Sunday, 1 April 2012

இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல், மனித உரிமை மீறல் - கண்டன அறிக்கை

“..உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருந்தாலும் அந்தக் கருத்தைச் சொல்லுவதற்கு உங்களுக்கிருக்கும் உரிமைக்காக  எனது உயிரையும் தருவேன்..”
-வோல்ட்டைர்-

முதலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அறுபத்தி நான்காவது சுதந்திர தின வாழ்த்தை எல்லா இலங்கை வாசகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையின் தனிமனித சுதந்திரம், தெரிவுச் சுதந்திரம், கருத்துரிமை என அடிப்படை மனித உரிமைகளுக்கான எல்லா வாயில்களையும் பல வருடங்களாக அச்சுறுத்தி வருகின்ற பேய்தான் ஆயுத முனையில் ஆட்களைக் கடத்துதல் என்பதாகும்.
அவசரகாலச் சட்டம் என்பது ஒரு சட்ட பூர்வ ஆட்கடத்தலாக யுத்தகாலத்திலும் அதன் பிறகும் இருந்து வந்தாலும் சர்வதேச நாடுகளின் மனித உரிமைக்கான கோரிக்கைகள், மனித உரிமை ஆர்வலர்களின் அறிக்கைகள் என தொடரான அழுத்தங்கள் காரணமாக மக்களின் வாழ்வுரிமை, சுதந்திரத்தின் மீது அரசுக்கிருக்கும் தார்மீகப் பொறுப்பு ஜனாதிபதியினால் உணரப்பட்டு (அல்லது அவ்வாறானதொரு சர்வதேசப் பாசாங்கு காட்டப்பட்டு)  அச்சட்டம் அமுலிலிருந்து நீக்கப்பட்டது நாமெல்லோரும் அறிந்த விடயம்.
இருந்த போதிலும் அரசியல் காரணங்களுக்காக ஆட்களைக் கடத்துதல், துன்புறுத்துதல், சட்ட விரோதமாக அரச ஆயுதங்களின் முனைகளில் தடுத்து வைத்து மிரட்டுதல் என்பன இன்றுவரைக்கும் எந்த மாற்றங்களுமின்றித் தொடர்ந்தும் இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது தெளிவிருந்தும் ஒரு மர்மமான நிகழ்வாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரைக்கும் யுத்தம் முடிந்து எல்லாத் தரப்புகளுமே ஆயுதங்களைக் களைந்து விட்டதாக ஒரு சமாதான நம்பிக்கை மக்களிடையேயும் சர்வதேசத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிற வேளை ஆயுத முனையில் ஆட்கள் திரும்பத் திரும்பக் கடத்தப்படுவது என்பது ஒரு விசேட கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிதென்பது அனைவரின் மீதும் இருக்கின்ற ஒரு பொறுப்பாகும்.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயினும் எந்தக் குழு அல்லது கருத்து நிலை சார்ந்தவர்களாயிருப்பினும் அல்லது இத்தகைய எந்த அரசியல் அடையாளமுமில்லாத தனிமனிதராயினும் அது யாராகத்தானிருப்பினும் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்படுவது என்பது தனிமனித சுதந்திரம், அரசியல் தெரிவுச்சுதந்திரம், சுதந்திரமாக நடமாடும் உரிமை அத்தனையையும் அத்து மீறும் செயல் என்றவொரு பொது நிலைப்பாட்டில் நின்றே இவ்விடயத்தை வன்மையாக எதிர்க்க வேண்டியிருக்கிறது.
ஏனென்றால் தனிமனித உரிமை, சுதந்திரம் என்பன சில வேளைகளில் அதிகாரத்திலிருப்போரின் மீதும் அத்துமீறப்பட வாய்ப்பிருக்கிறது.
கடந்த வாரம் காத்தான்குடி நகரசபையில் ஆளும் அரசாங்கத் தரப்புக்கு எதிர்க்கட்சியாக இயங்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனப்படும் அரசியல் கட்சியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் ஆயுத முனையில் கடத்தப்பட்டு நான்கு மணிநேரம் தடுப்பில் வைத்துத் துன்புறுத்தப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அக்கட்சி ஜனநாயக வழியில் உள்ளுர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இதுபற்றிய விளக்கங்களையும் கண்டனங்களையும் மக்களுக்குத் தெரிவித்திருந்தது.
இலங்கையில் சிவில் நிர்வாகம், பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, அபிவிருத்திகள் என ஒரு நல்ல மாற்றம் ஒரு புறம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகின்ற அதேநேரம் யுத்தகாலத்திலிருந்து தொடங்கப்பட்ட ஆயுத முனையில் ஆட்களைக் கடத்துதல், ஒருவரின் சுய அரசியல் விருப்புக்கும் தெரிவுக்கும் எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்தல், தடுத்து வைத்துத் துன்புறுத்துல் போன்ற மிலேச்சத்தனமான தனிமனித உரிமை மீறல்கள் இன்றுவரை தொடர்ந்த வண்ணமேயிருப்பது துர்ப்பாக்கியமாகும்.
இலங்கையில் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்ற பத்திரிகையாளர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், யுத்த காலங்களிலும் அதன் பிறகும் காணாமல் போனவர்கள் பற்றி எந்தவித திருப்தியான அரச கருவிகளின் முன்னெடுப்புகளோ முறையான பதில்களோ எந்தச் சமுகத்தைச் சார்ந்தவர்களுக்கும் வழங்கப்படாமலேயே முறைப்பாடுகளும், வழக்குகளும், உண்மையைக் கண்டறியும் குழுக்களும் ஆண்டாண்டு காலமாகக் கிடப்பில் கிடக்கின்ற அதே நேரம் இம் மனித உரிமை அத்துமீறலும் தொடர்ந்த வண்ணமேயிருப்பது அரசினதும் ஆளும் அரசாங்கத்தினதும்  ஜனநாயகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறது.
ஒரு அரசினால் பாதுகாக்கப்படவேண்டிய தனிமனித வாழ்வுரிமையானது இலங்கையில் இன்று ஆயுத முனையில் கேள்விக்குள்ளாகியிருப்பது யுத்தத்தின் பிறகு இலங்கையில் முற்று முழுதாகக் களைந்ததாகச் சொல்லப்படும் ஆயுதக் கலாசாரம் பற்றிய சர்வதேசத்துக்கான அறிக்கைகளையும் பூரண சமாதானம் பற்றிய பிரஸ்தாபிப்புகளையும் ஐயப்படச் செய்கிறது.
அதிலும் குறிப்பாக ஆளும் அரசியல் தரப்புக்கு ஏதேனுமொரு வகையில் எதிராக நிலைப்பாட்டில் அரசியல் சார்ந்தோ, ஊடகத்துறையிலோ அல்லது நிர்வாகம் சார் ஏனைய துறைகளிவோ சிந்திக்கின்ற, எழுதுகின்ற மற்றும் செயற்படுகின்றவர்களின் மீதே இத்தகைய ஆயுத அத்து மீறல்களும், துன்புறுத்தல்களும் கொலைகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதானது உள்நாட்டு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளில் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடப்பட்டாக வேண்டியது.
இந்த வகையில் இந்தச் சம்பவத்தின் பிறகு அதன் போது கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த அந்த அரசியல் கட்சியின் ஆதரவாளரின் அறிக்கையின் படி இதே காரணத்தின் பின்னணியேயிருப்பதாகத் தெரியவருவது இந்நிகழ்வும் இலங்கையில் தொடராக இடம்பெற்று வரும் தனிமனித உரிமை அத்துமீறல்களின் ஒரு தொடர்தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இலங்கை அரசியல் யாப்பானது மிகத் தெளிவாக தனிமனிதருக்கான எல்லாச் சுதந்திரங்களையும் அளித்திருக்கின்ற போது அதை உறுதிப்படுத்திப் பாதுகாப்பதற்கான சிவில் அழுத்தங்களை அரச கருவிகளுக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்ந்தும் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியதும் இதற்கான தேசிய சர்வதேச மனித உரிமை ஆர்வலர் அமைப்புக்களுக்கும் நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டியதும் மனித குலத்துக்கும்  உலகில் வாழும் எல்லா மக்களின் வாழ்வுரிமைக்கும் செய்யும் மகத்தான பணியாகவே நாம் கருதுகின்றோம்.
இத்தகைய அடிப்படை உரிமையின் மீது அத்து மீறும் வண்ணம் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்க ஆதரவாளருக்கு நிகழ்ந்த சம்பவத்தை நாம்  வன்மையாகக் கண்டிப்பதோடு இதில் பாதிக்கப்பட்ட அந்த ஆதரவாளருடன் எமது கவலையையும் பகிர்ந்து கொள்கிறோம் .
உலகத்தில் எல்லா உயிர்களும் சமனானவை என்பதிலும் எல்லா உயிர்களும் எக்காரணங்களாலும் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதையும் மட்டுமே நாம் சம்பவங்களின் போது கவனத்தில் எடுக்கிறோம் என்பதையும் பொறுப்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசியல் நோக்கங்களுக்கு வெளியால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருக்கின்ற அந்தப் பாதிக்கப்பட்டவருக்கு இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்வர்களை சட்டத்தின் முன்நிறுத்த ஒரு ஊடகம் என்ற வகையில் கைகோர்ப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு இந்தச் சம்பவத்தினை பக்கச் சார்புகள், சொந்தக் குரோதங்களுக்கு அப்பாற்பட்டு உரிமை எல்லோருக்குமானது என்ற தார்மீக எண்ணத்துடன் முடிந்தளவு மக்கள் மயப்படுத்தவும் பாதிக்கப்பட்டிருப்பவருக்கு நீதி வழங்குமுகமாக அரச நிறுவனங்களுக்கும், மனித உரிமை நிறுவனங்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லவும், நீதியைப் பெறுவதற்கான அழுத்தங்களைக் கொடுக்கவும் வாசகர்கள் முடிந்தளவில் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

Article posted in MuslimCN
Date: 05/02/2012

Sunday, 8 January 2012

காதல் கதை



அறுந்து போன கனவுத்துண்டுகளில்
நான்கு சம அளவானவை நின் சிரிப்புத்துண்டுகளாகும்.

மெல்லக் கோபப்படுகின்ற இன்னொரு துண்டு பின்னிரவுக்குரியது.
அது ஈரலிப்பானதும்தான்.

பூச்சட்டிக்குள் வைத்து பதியம் வைத்து சிதறிய நின்றன் புன்னகைத் துண்டுகளை வளர்த்துப்
பெரும் மரமாக்கலாமென்ற எண்ணமே என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
நீ விரும்பும் மீமெய்க் கதைகளால்
தன்செயலெண்ணித் தவிப்பதும் தீர்ந்துற்றிங்கு

இதை விடத் தெளிவாக நீ விளங்கிக் கொள்ளும் வண்ணம்
இன்னொரு காதல் கதையும் இருக்கிறது.

உன்னுடைய தலை மயிரை எண்ணை பூசிய மயிலிறகுடன் சேர்த்து
புத்தகமொன்றுக்குள் வைத்து
அது மூன்றாம் வானம் வரை நீண்ட பிறகு
அதைப் பிடித்து ஏறி ரெண்டு பேரும் ஓடிப் போவது..

நம்மைத் துரத்தி வருகிற கடந்த காலத்தின் நான்கள்
ஏற முடியாது சுமையில் வழுக்கி விழுந்துவிடும்.

மறந்துவிடாதே கர்த்தர் எனப்படும் ஈசா எனப்படும் மெசியா
இரண்டாம் வானத்தில்தான் இருக்கிறார்.
திரும்பி வரும்போது அவரை நம் குழந்தையென்று
கூட்டி வரலாம்.

ஏய் இனியும் இப்படி லூசுக் கதைகளெல்லாம் சொல்லி
உன்னை நித்திரையாக்க இயலாது.

கடந்து போகிற வயது கொடும் பாம்பு கண்மணி
ஈரமான இரவுகளில் மயிர் கூச்செறியும் உச்சி முனையில் கண்களைக் கொத்துகிறது.

Monday, 31 October 2011

கடவுளின் முகம் அணிவதற்கு சுகமானது



பிடறி நரம்புக்கு மிக நெருக்கமாக
ஒலிகளால் பின்னப்பட்ட ஒன்று நெளிந்தவண்ணமிருக்கிறது.

நேர்த்தியாகச் சிரைக்கப்பட்ட இறுதி முகத்தைக் கழற்றி விட்டு
உன்னை அணிந்து கொள்ளலாமா என்றும் யோசிக்கிறது
முகமற்றிருத்தலின் அவமானம்.

திரும்பவும் என்னையே காட்டுவதில் தோற்றுக்கொண்டிருந்த
கண்ணாடிகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறேன்.

என் போன வருசத்து முகமொன்று
மீண்டு வரத் திசை தெரியாத காட்டுக்குள்ளிருந்துகொண்டு
தத்தளிப்பது போல பாவனையுடன் நானாகக் தெரிகிறது.

அது உடைந்த துண்டொன்றுதான்.

கண்ணாடிகள் சடலங்களை மட்டுமே காட்டும்
கண்ணாடிகள் சடலங்களை மட்டுமே காட்டும்
கண்ணாடிகள்…. சடலங்கள்….

நெளிந்து கொண்டிருந்த நீ காதோரமாக
என்னைக் கொஞ்சுவது போல சொற்களாகிறாய்..

சரித்திரங்களுக்கு கடவுளாக நீ மட்டுமே இருக்க முடியுமானதாக
நம்பி ஏற்றுக் கொள்கிறேன்.



 வல்லினம் 
-நவம்பர் 2011-

Saturday, 6 August 2011

மனப் பூனை

 பதுங்கியிருத்தல், பாய்ந்து ஓடுதலை எல்லாம் பூனை மறந்திருக்கவேண்டும்..
இல்லை,
படைக்கும் போது அவற்றை நான் கலக்க மறந்ததுதான் உண்மை.

அது எழுதப்படாதிருந்த சொற்கள் கொண்டு படைக்கப்பட்ட பூனை

சோர்வின் மிகையினை, அதன் தகிப்பினைக் கூட
சகித்துக்கொள்ள முடியாது நோயுறுகிறது

செயல்கள் அற்று 'அமைதி' யாயிருந்தது இறுகிய 'மௌனமாகி'விடுகிறது.

பூனையின் புண்களுக்குள்ளிருந்து புழுப்புழுவாக நெளிந்துகொண்டிருக்கிறது ஆர்வம்

அது எப்படியும் இறந்து விடும்

எழுதப்படாத சொற்களைத்தின்னவோ மனப்பிறழ்வால் அவதியுறவோ இன்னொரு பூனையைப் படைத்தலும் சாத்தியமில்லை.

செயலற்றிருத்தல்???

இனி எழுத்தோடு சங்கமிக்கலாம்
பேசாமல் பூனையைப் புதைத்த இடத்தை வணங்கத் தொடங்கலாம்

Saturday, 21 May 2011

அசைவுகளுக்குள் நெளிந்துகொண்டிருக்கிறது சடலம்,
பாவம் அதைப் பார்த்து துரோகி என்கிறீர்கள்

Sunday, 27 February 2011

பலவாறும் உளறுவது

01. இருட்டோடு இருட்டாக எழுதி முடித்துவிடுவதுதான் நல்லது
வெளிச்சமான இரவுகளால் வன்புணர்ச்சி செய்யப்படுவதில்
எனக்கென்றால் இஷ்டமில்லை,
அவற்றில் சுகமும் கிடையாது

கரன்ட் இல்லாத இரவுகளின் சுகம் அலாதியானது தெரியுமா..
அவற்றின் இருண்ட சிதிலங்களுக்குள்ளாலிருந்து மீட்டெடுக்கப்படுகின்ற நான்
இதுவரை வரையாத விளக்கொளியின் கோடுகளாலெல்லாம்
என்னை வரைந்துகொண்டிருக்கிறது.

நீ யென்பது காரிருளில் திடீரெனப் பெய்கின்ற மழையாகவும்,
நானென்பது அப்போதுதான் துவட்டி முடிந்த மழையில் நனைந்த தலைமுடியாகவும்
கவிதை கவிதையாய் எழுதி வைப்பதற்கு இது நல்லநேரமில்லைதான்.
அவ்வளவு இருட்டு

02. பைத்தியம் முற்றிவிட்ட நான்
சிலுவையிலறையப்பட்ட நான்
ஏற்கனவே சொல்லிலடைக்கப்பட்டுவிட்ட நான்
நுளம்புத்திரிப் புகையினால் விரட்டியடிக்கப்பட சதிசெய்யப்பட்ட நான்
மங்கிய விளக்கொளியில் நித்திரையினை விடிய விடியத் தேடிக்கொண்டிருக்கிற நான்
என அது நீ அறிந்துகொள்ள முடியாத வேறு பலவாகவும் வகைப்படும்.

03. முகத்தில் நேர்த்தியுடன் செதுக்கப்பட்டிருக்கிற மயிர்க்கும்பம்
கடவுளாயிருந்ததின் பின்புறம் (அது இப்போது விலைக்கு விடப்படும் பருவம்)

இருட்டின் போதையில் வேறென்ன உளறலாம் என
கற்பனை செய்துகொண்டிருக்கிறேன்
மதுக் குவளையொன்றைக் கனவுகண்டதனையும் வலிந்து எழுதாது தவிர்க்கிறேன்.

தத்துவங்களைப் போல
அரசியலைப்போல
நேர்மையும் கொலைசெய்யப்படவேண்டிய துரோகிதான்
நம்பிக்கைத் துரோகி

விடிய விடிய இருட்டிடம்
இப்படியே தூங்குவதுபோல பாசாங்கு செய்வதாகவே உத்தேசம்

Monday, 14 February 2011

நல்லாட்சி என்கிற கறுத்த ஆடும் முஸ்லிம் அரசியல் மேய்ச்சல் நிலமும் என்ற மனப்பிறழ்வில் எழுதப்படும் கதையிது.




அன்பின் இணையத்தள நிர்வாகிகளுக்கு,
இங்கே என்னால் எழுதி இணைக்கப்பட்டுள்ள இதை அரசியல் பற்றிய கதையா அல்லது கட்டுரையா என்று திட்டவட்டமாகக் கூறமுடியாதிருக்கிறது.
இருந்தும் என்னைப் போன்ற சாதாரண பாமரர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலைப் பற்றிய அபிப்பிராயம் இருக்கும் என்பதையும், அரசியல் பற்றி கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் தனது நிலைப்பாட்டைப் பின்பற்றுவதற்கும் பூரண உரிமை இருப்பதையும் மறந்து அல்லது தெரியாமல் 'அரசியல் பேசுவதற்கு அல்லது எங்களை விமர்சிப்பதற்கு உனக்கென்ன தகுதியிருக்கிறது' என்று கேள்விகேட்பது ஒரு நல்ல பண்பாக இருக்கமுடியாது. 
இவ்வாறாக அரசியல் பற்றி நான் நினைப்பதையும் கருத்தாகக் கொண்டிருப்பதையும் எழுத்தாக்கிவிடுகின்ற முயற்சியில் வந்ததே இந்தப் பிரதியாகும்.
அரசியல், தேர்தல் என்றாகிவிட்ட பிறகு கருத்துச்சொல்பவரின் தகுதியைப் பார்ப்பதும் அவரை மோசமாக மதிப்பிடுவதும் வேடிக்கையாக இருக்கிறது.
அது போக திருமணம் முடிக்கவும், மற்ற மனிதனைப் பார்த்து சிரிக்கவும் வேண்டுமானால் யாருக்கும் தகுதி தேவைப்படலாம். அதையே அரசியல் என்று வரும் போது ஒவ்வொரு தனித் தனி வாக்காளனுக்கும் ஒவ்வொரு கருத்துநிலையும் அதை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும்; இருக்கும் என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது. அரசியலில் பௌதீகமாக இயங்குவது மட்டும்தான் ஏற்றுக்கொள்ள முடியுமானதாகவும், தம்மைவிடவும் யாருக்கும் நேர்மையாகச் சிந்திக்க வராது என்றும் எண்ணுவது அரசியல் பற்றிச் சிந்திப்பது குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ என்று கேட்கத் தோணுகிறது..
ஆகவேதான் கீழே இணைக்கப்படுகின்ற என்னுடைய எழுத்தினை தயவுசெய்து தங்களின் ஊடகத்தில் பிரசுரிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
இது எந்த அரசியல் கட்சியோ சிந்தனையோ சார்ந்த ஒன்றல்ல, மாறாக ஒரு பாமர சாமானிய வாக்காளனின் நிலைப்பாட்டை எழுதிப்பார்த்தது என்பதையும் உறுதியுடன் கூறிக்கொள்வதோடு ஒரு வாக்காளனாக என்னுடைய கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்த உதவுவீர்கள் எனவும் நம்புகிறேன்.


தங்கள் உண்மையுள்ள
மு அ முஹம்மத் பதீக்

fatheek@gmail.com






நல்லாட்சி என்கிற கறுத்த ஆடும் முஸ்லிம் அரசியல் மேய்ச்சல் நிலமும் என்ற மனப்பிறழ்வில் எழுதப்படும் கதையிது.

இதில் முதற்பாகம் ‘நல்லாட்சி’
(Good Governance) எனப்படும் புதியதொரு சொற்பிரயோகம் பற்றியதாகவும், இரண்டாவது இன்றுவரைக்கும் றகுமத்தும்மாவின் தலைவர் மீதான காதல் பற்றியதாகவும் அமைகிறது.

“நாரே தக்பீர் அல்லா
ஹு அக்பர்” என்ற உரத்த வாக்கியத்திலிருந்து நமக்கான முகவரியை மாபெருந்தலைவன் தேடித்தந்ததிலிருந்து வரலாறு நமது கதையெனப்படுகிற அதைத் தொடங்குகிறது என ஆரம்பிப்போம்.
இலங்கையில் யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்ததன் பிறகு நுழைந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகையோடு வெறுமனே அரசியல் பாடநெறிகளில் ஒருபாடமாக மட்டும் இருந்த நல்லாட்சி
(Good Governance) என்ற சொற்பதம் மெல்ல மெல்ல மக்களிடத்தில் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது. வன்முறைக்கான பிரதியீட்டு அங்கீகாரமாக (Approved Alternative) ஜனநாயக அரசியலின் வடிவம் மாற்றம் பெற்றே பல தசாப்தங்கள் உலகில் கடந்துவிட்ட நிலையில் இடதுசாரித்தன்மை நீக்கப்பட்ட ஒரு மாற்று அரசியல் கருத்தாக இதை வளர்த்தெடுப்பதற்கான பிரயத்தனத்தையே மேற்கிலிருந்து வருகின்ற இந் நிறுவனங்களின் நல்லாட்சி பற்றிய வெளியீடுகளில் பெரும்பாலும் அவதானிக்க முடிகிறது.
இதற்கென நிறுவனமயப்பட்டு இந்தக் கருத்தியலை வளர்த்தெடுக்கின்ற அரசியல் சாராத ஜனநாயக செயற்பாட்டாளர்கள் அதிகமானவர்கள் செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.
இங்கே நல்லாட்சி என்ற சொல் கொண்டிருக்கின்ற பொருள் விளக்கம் பற்றியோ மக்களாட்சிக்கு  (Democracy) மாற்றாக அது முன்வைக்கப்படுகின்ற தர்க்கங்கள் குறித்தோ ஆராய்வதனை விடவும் அந்தச் சொல்லினை முன்வைத்து இலங்கையின் இயக்கமயப்பட்ட சிந்தனை சார்ந்த சிறு குழுக்களிடம் ஒரு உள்ளுர்க் கதை முஸ்லிம் அரசியலோடு இணைந்ததாகக் கட்டிவிடப்பட்டிருப்பது குறித்தே தேர்தல் காலம் கதைக்கத் தூண்டுகிறது.

எம்.எச.;எம.;அஷ்ரப், முஸ்லிம் தேசியம் அதற்கான அரசியல் தனித்துவம் பற்றிய ஒரு உணர்வு பூர்வமான பிரக்ஞையூட்டுதலை ஆரம்பித்தபோது ஒரு வகையான குழுவாதல் மனநிலை 
  ( grouping mentality ) தருகின்ற கிளர்ச்சியையும், புண்களைச் சொறிகின்றது போல இன்பத்தினையும் அரசியல்மயப்படுதலுக்கான (Politicization) தகுதிகளாக நம்பி குறிப்பிட்டுச் சொல்லும்படியான நேரடி அரசியல் செயற்பாட்டுக்குள் ஒரு சமூகமாக நுழையத் தொடங்கியதிலிருந்து முஸ்லிம் அரசியல் என்பதன் பாதை தேர்தல் முறைகளினூடாகப் பயணிக்கத் தொடங்குகிறது.
அதிகாரம் எப்போதும் மனித மனதினைத் தன்பக்கமே வைத்துக்கொள்ளும் என்பதிலிருந்து விதிவிலக்குப்பெறுமளவுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் வானவர்களிடமிருந்து தூது வரப்பெற்றவர்கள் என்பது போன்ற புனைவுகள் மெல்ல மெல்ல அவிழத் தொடங்கியதே முஸ்லிம் சிவில் எதிர்ப்பரசியல் சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட காலம் எனலாம்.
முஸ்லிம் மாகாணத்துக்கான அழுத்தங்களைக் கொடுப்பதற்கான சிவில் அழுத்தங்கள் இளைஞர்களினாலும் இஸ்லாமிய இயக்கங்களின் சிந்தனை கொண்டவர்களினாலும் குழுக்கள் குழுக்களாக அரசியல் சிந்தனை கொண்ட மாணவர்களினாலும் முஸ்லிம் அரசியல் வாதிகளின் போதாமையின் மீது சமூக மாற்ற நோக்கத்திலாக இத்தகைய அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
அதிலிருந்து இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் கோரிக்கைகள் ஒரு அரசியல் அலகினைக் கோருவதாக அஷ்ரபினால் மீண்டும் புதுப்பதிப்புப் பெறுகின்றன.
அதிலிருந்து மேலும் பல முரண் கருத்தியல்கள், முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டமாக பல அரசியல் சார்ந்த சாராத தரப்பினரிடமிருந்து வெளிவரத் தொடங்கின.
தென்கிழக்குப் பல்கலைக் கழகம் முஸ்லிம் தேசம் என்பதைப் பிரகடனம் செய்கிறது.
விக்டர் எனப்படுகிறவர் (இவர் முஸ்லிம் தேசம் என்ற சொல்லாடலைப் போலவே இன்னமும் விபரமோ முகவரியோ அறியப்படாதவர் ) அந்த நிழல் முஸ்லிம் தேசத்திற்குள் நுழைந்து ஆய்வொன்றினை வெளியிடுகிறார்.
 அதற்குள் முஸ்லிம்களுக்கான சமஷ்டி அதிகாரப் பகிர்வு பற்றி இன்னொருவரின் விதந்துரை உரைக்கப்படுகிறது.
அவ்வாறே உள்ளேயும் முஸ்லிம் அரசியல் கருத்தியல் எல்லாவற்றுக்கும் தனிக்காட்டு ராஜாவாகவிருந்த அஷ்ரபின் மரணம் அதன் பிறகான கட்சி உருவாக்கங்களு
ம், நாட்டில் பேச்சுவார்த்தை என நடாத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்புகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தனக்கான பிரதிநிதித்துவம் செய்தல் (Representing) என்பதை ஒரு வீதமேனும் செய்யாமை எனப் பல நிகழ்வுகளும் அவற்றின் அதே காலங்களில் நடந்த அத்துமீறிய படுகொலைகளும் இனஒடுக்குமுறைகளும் என ஒரு ஒற்றைக் கருத்தியலினூடாக பல் கலாசார மனிதக் குழுவுக்கான குரல் ஒலித்துவிட முடியாமையினையே வெளிப்படுத்தன.
அத்தோடு முஸ்லிம் அரசியல் அல்லது இலங்கை முஸ்லிம்களுக்கான தீர்வு என்பதிலும் பல்வேறு வகையான கருத்தியல்கள் முன்வைக்கப்பட ஆரம்பிக்கின்றன.
இவை தான் சார்ந்த குழுவை வளர்த்தெடுப்பதற்கானதாக, பாரம்பரிய முஸ்லிம் கட்சியை எதிர்க்கின்றதாகதாக இயங்கத்தொடங்குகின்றன.
அதைவிட இலங்கை அரசியல் பற்றிய அறிவாழமிக்க
(Intellectually) கருத்தியல்களை காலத்துக்குக்காலம் கூறிவந்த வெளிநாட்டிலிருந்து வந்த இஸ்லாமிய இயக்கங்களும் தங்கள் பாட்டுக்கு எந்த அரசியல் கட்சியும் சாராத சமூக நலனில் சாய்வுகொண்டும் தமது பாடத்திட்டப் (Syllabus) புத்தகங்களுக்கு நேர்மையாகவும் அரசியல் கருத்தியலினை முஸ்லிம்களிடம் பரப்பத்தொடங்கின.
இதை ஒற்றுமையின்மை என்ற அதிகாரத் தொனியில் பார்த்துவிடுவதை விட ஒரு ஒற்றை வட்டத்துக்குள் அடக்கிவைக்கப்பட ஒண்ணாது திணறும் சமூகத்தின் ஏனைய ஆன்மாக்களின் வெளிவருகை என்பதாகப் பார்ப்பது புதிதாகவிருக்கும் என நம்புகிறேன்.
 
இத்தகைய கருத்தியல்களுக்குப் பிறகும் அரசியல் தீர்வு என்பதாகப் பேசப்பட்ட சொற்பதமும் அதன் தேவையும் அதற்கான உக்கிரமும் உள்ளுர வளர்ச்சியடைந்துகொண்டே வந்தது என்பதும், அதிகமான அரசியல் கருத்தியல்கள் பிரபாகரன் இறந்துவிட்டதற்குப் பிந்திய இன்றுவரைக்கும்; நம்மிடையே எந்தவொரு நிதானிப்போ, மீள்பரிசீலனையோ  (Reconciliation) இன்றி அதே பாணியில் உருவாகிக்கொண்டிருக்கிறதுமே அரசியல் செயற்பாட்டைத் தீர்மானிக்கின்ற கருத்தியலின் சூழல் பற்றிய அறிவின் போதாமையினைத் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கிறது எனலாம்.
இப்படியானதொரு எளிய சுருக்கமாக முஸ்லிம் அரசியல் என்ற சொல்முறை வளர்ச்சியiனையும் அதன் பெயரிலான வளர்ச்சியடையாத அல்லது அதனை நோக்கி இயங்காத வெறும் நிகழ்ச்சி நிரலுக்குள் சுருங்கிப்போன தூரநோக்கற்ற
  (non vision அரசியல் அன்றாடங்காய்ச்சி நிலையையும் கருதிக்கொள்வோமாக இருந்தால் மிக எளிதாக இப்போது நல்லாட்சி என்ற புதிய சொல்லின் சலனத்தினைப் புரிந்துகொள்ள முடியும்.
எனக்கென்றால் அது ஒரு பரந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாட்டுக்கூட்டத்துக்குள் தவறி நுழைந்து தன்பாட்டில் சுதாகரித்து வெளிவந்து விட விருப்பமில்லாமல் மேய்ந்துகொண்டிருக்கும் கறுத்த ஆட்டுக் குட்டியொன்று போல இந்த சொல்லின் சலனம் வெளிப்படத் தொடங்கியிருக்கிறதாகவே எண்ணத்தோன்றுகிறது.
அல்லது முஸ்லிம் சமூகம், முஸ்லிம் தனித்துவ அரசியல் போன்றவற்றை ஒரு மனப்பிறழ்வுக்குள்ளானவரின் புண்ணைப் போல வியாக்கியானம் தந்துகொண்டு அதைச் சொறிந்து சொறிந்தே ஒரு சிறு குழுமத்தின் சமுக வாழ்வுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருக்கிறதாக உள்ளுர்த் தேர்தல் வரைக்குமான சப்பை அரசியலாக காட்டப்படும் இந்தச் சொல்லினைப் பார்க்க வைக்கிறது.
நல்லதன் மீதிருக்கின்ற ஒரு வகையான நேர்த் தன்மைகொண்ட சமுகப் பொதுப்புத்தியினை
(Positively definable predetermined mentality)  இத்தகைய குழுக்கள் தமது ஏணிகளாகப் பயன்படுத்த விழைந்தருக்கின்றன என்பதையும் துணிந்து கூறலாம்.
இப்படி இதனைப் பார்க்கத் தொடங்கும் போது இதுவொரு முஸ்லிம் அரசியலுக்குள் தொடராக மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளிலிருந்து உருவிலும் நிறத்திலும் மொழிச்சலிலும் வித்தியாசம் கொண்டிருப்பதைப் போலவே உருவத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால் உருவேற்றுவதற்குப் பயன்படுத்துகின்ற கோஷம் மற்றும் உணர்ச்சிபூர்வப் பேச்சுக்களில் தனித்துவமாகக் கேட்கும் சத்தங்கள், உயிரை மாய்ததுத் தீக்குளிக்கவும் தன்னுடலைப் புனிதமாக அர்ப்பணிக்குமளவு தொண்டர் வட்டம், மூளைச் சலவை செய்யப்பட்ட மாணவர் குழு என எல்லாமே எல்லாக் குறைக் கருத்தியல்களைப் போலவும் (சொல்ல மறந்து விட்டேன், முஸ்லிம் மார்க்சியம் கூட பேசிப் பார்த்தார்கள், முடியவில்லை) அஷ்ரபிலிருந்தே திரும்பத் திரும்ப ஆரம்பிப்பதானது பிரச்சாரங்களில் மயங்கி எல்லாவற்றிலுமிருந்தும் விலகிய ஒரு கருத்தியலாக இந்த நல்லாட்சி என்பதை வேறுபடுத்திப் பார்க்கும் ஆர்வத்தினைத் தடுத்துவிடுகிறது.
இருந்தாலும் உள்ளுர் மட்டத்தில் இதன் முன்வைப்பு முறைமையிலும் அதன் பின்னால் தெளிவாகப் புலப்படுகின்ற ஒரு வகையான அறம் சார்ந்த அதிகாரத் தோரணையிலும்  (
Moral Force) அழகிய முன்மாதிரி போன்ற தூய்மைவாத வசனங்களுக்குள்ளும் இதுவரை அறிமுகமில்லாததொரு தூய்மைவாத வன்முறையொன்றுக்கான வித்துக்கள் மறைந்திருப்பதாகவே அச்சந்தருகிறது.
அதாவது தூய்மையற்ற அல்லது புனிதமற்றவர்களாக விவாதிக்கப்படும் எல்லா மற்றத்தரப்புக்களும் புனிதம், தூய்மை போன்ற அறச்சிக்கல்களினால் அரசியலிலிருக்கத் தகுதியில்லாதன போன்ற சாடுதல்களால் அரசியல் அதிகாரத்தினால் கள நீக்கம் செய்யப்பட்டு இதுவரை நிகழ்ந்திராத நிழல் வன்முறைக்குள்ளாக்கப்படப் போகின்ற அபாயத்தைத்தான் மறைமுகமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
அன்றாடங்காய்ச்சி அரசியல் நிகழ்வுகளை விட்டுவிடுவோம். 
 
நல்லாட்சி என்ற சொல்லின் மீதான ஆரம்பமான கேள்விகளுக்குள் மட்டும் நுழைந்து பார்க்க முடியும் எனக் கருதுகிறேன்.
ஆஹ்..... இப்போதுதான் இன்னொரு நினைப்பு வருகிறது. அதாவது மிக நீண்ட காலமாக இயங்கி வந்த ஜமாஅதே இஸ்லாமியும் தேர்தலில் குதிக்கிறார்களாம்.
அதாவது முப்பது நாற்பது வருடங்களாக வளர்த்தெடுத்த ஒரு கருத்தியலின் அரசியல் வடிவத்தினைத் தேர்தலில் விட்டுப் பரீட்சித்துப் பார்க்கின்ற முயற்சியாகவே இதைக் கருத முடியும். இங்கே இத்தனைகாலத்துக்குப்பிறகு பரீட்சித்துப்பார்க்க முடிவெடுத்திருப்பதே பாராட்டுக்குரியதே.
முஸ்லிம் அரசியல் என்பதில் மேய்ந்த மேலே சொன்ன
Intellectual கருத்தியல்களில் ஜமாஅதே இஸ்லாமியும் ஒன்று என்பது குறிப்பிட வேண்டியது.
இப்போது வரும் முதலாவது கேள்வி
நல்லாட்சி என மொழியப்படும் சொல்லுக்கு கொடுக்கப்படுகின்ற விளக்கம் என்பதும் அது முஸ்லிம் தனித்துவ அரசியலில் எவ்வாறு ஒரு தீர்வுத்திட்டமாக முன்வைப்பதற்கான பொருத்தப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதுமாகும்.
அதாவது நல்லாட்சி என்ற ஜனநாயகச் சாய்வுகொண்ட ஒரு கோபரேட் கருத்தியலை அதுவும் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களிடத்தில் ‘இயக்கம்’ என்ற ஒரு தோல்வியுற்றுத் திரும்பிக்கொண்டிருக்கின்ற முகமூடியுடன் (Mask) அதே முஸ்லிம்களுக்கான தீர்வாக, முஸ்லிம் அரசியல் அடையாளத்துக்கான புதிய முகவரியாக (New Address) சொல்ல வருவதும் வெறும் அரசியல் தடித்தனம் என்றுதானே சொல்லிவிட்டுப் போகவேண்டியிருக்கிறது.
 
‘வளர்ச்சியடையத் தொடங்கிய’ என்பதற்குக்கூட பொருந்தாத வெறுமனே சொல்ல ஆரம்பிக்கப்பட்ட புதிய வடிவத்திலான சொல்லாக மட்டுமே முஸ்லிம் ஊர் ஒன்றுக்குள் குப்புறவே படுக்கும் பபாவை (சிறு குழந்தை) முஸ்லிம் சமூகத்தினைக் கட்டியாளப்போகின்ற கருத்தியலாகவும் இதுவரையிருந்த எல்லாவற்றிலும் மேலான மிகச்சரியான அரசியல் தீர்வாகவும் வலிந்து திணிப்பது  இதுவரைகால சிறுபான்மை அரசியலையே இழிவுபடுத்தும் செயலாகாதா?? என்பதாகும்.
 மற்றது பிரபாகரனின் இறப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரையான முற்று முமுதான அரசிய
ல், சிவில், கலாசார மாற்றங்களை ஒரு தீவிர வேகத்துடன் எல்லா சமூகங்களும் எதிர்நோக்கியிருப்பதும், ஏற்கனவே பிரச்சினைகளாகப் பேசப்பட்ட வாழ்வியலில் தலைகீழாக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதும், சமூகவியல் கூறுகளான கலாசாரம், பாலியல், சிவில் சட்டம் போன்றவற்றில் மனித வாழ்வும் தேவைகளும் கிளை பிரிந்திருப்பதும்,  அதே நேரம் தனிமனித சுதந்திரம், எழுத்து/ஊடக உரிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான இடம் இன்னமும் நெருங்கக் கடினமாக பாரிய இடைவெளிகளையே விட்டுக்கொண்டிருப்பதுமான பெயரிடத் தெரியாத சூழலில் இவற்றை உட்செரித்த புதிய சிந்தனை முகாமாக நல்லாட்சி என்ற கருத்தியல் தனது இயக்கத்தினை (Motion) தொடங்கியிருக்கிறதா?? என்ற கேள்வியும் அரித்துக்கொண்டேயிருக்கிறது.
இவை வெறுமனே ‘நல்ல’ ‘தூய்மையான’ ‘கறைபடியாத’  போன்ற மயக்கந்தரும் பொதுப்புத்திகளைக் கட்டமைக்கும் சொற்பதங்களினால் கவனமாக இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் அவதானிக்க இடமிருக்கிறது.
அரசியலே இருப்பும் வாழ்வுமென ஓதி ஊதப்பட்ட சமூகம் என்பதாலும் அத்தகைய மனநிலையிலிருந்து மாறிவிடாதிருக்கும் கவனத்தோடு தேர்தலைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் எல்லோராலும் உருவேற்றப்படுவதுமே நமது துயரமான தலைவிதியாக இருந்துகொண்டிருக்கிறது.
ஜனநாயகத்தின் அச்சாணியாகவிருந்து இறந்துபோன தேர்தல் வாக்களிப்பு முறைக்குள் தன்னுடைய பலத்தினைக் காட்டிவிடுகின்ற வக்கிரமான பாசிசத்தின் உடல் புதைந்துபோயிருக்கிறதும், அவற்றைச் சுற்றியே கருத்தியல்கள் பின்னப்படுவதும், அதை வெட்கமின்றி சந்தைப்படுத்துவதையெல்லாம் பெரிய புரட்சிகளாக எண்ணிக்கொள்வதும் அரசியலின் அதி இழிந்த நிலையாகத்தான் கணிக்கப்பட வேண்டியவை.
இத்தகைய தத்துவச்சிகலோடுதான் முஸ்லிம் அரசியல் அடையாளத்தைச் சுமந்திருப்பதாகக் கூறப்படும் நானுட்பட்ட சமூகம் ஒரு உள்ளுர்த் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம்.

இங்கே என்னுடைய மனம் பிறழத் தொடங்கும்.

“ நாரே தக்பீர் அல்லா
ஹு அக்பர் “
“ இது நமது விடியலுக்கான பயணம் “.

இவற்றிலிருந்து பிறந்த இன்னொரு மனதிலிருந்து இப்போது ஒரு கதை சொல்லப்போகிறேன்.

இதுவொரு காதல் ததை.
தலைவரைக் காதலித்த கதை.
இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு காதலின் கதை.

தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி முண்ணாண் வரை எவ்வாறு ஆழச்சென்று தேடி கண்ணீர்த்துளிகளை பனிக்கச்செய்ததோ,
உடலின் எல்லா மூட்டுக்களையும் ஒருதரம் எவ்வாறு உலுக்கிப்பார்த்ததோ,
இன்றுவரைக்கும் தலைவர் என்ற இடத்தினை எவ்வாறு வேறு யாருக்கும் தர மனம் மறுக்கிறதோ
அந்தத் துளித் துளிக் காதல்களில் மொத்த வடிவமாக தெருக்களில் திரிந்துகொண்டிருப்பவள்தான் றகுமத்தும்மா.
ஒரு நான்கைந்து நாளுக்கு முதல் கண்டபோதும் அதே வேகமான நடை.
“என்ன றகுமத்து? எங்கபோறாய்?”
“வெள்ளத்துக்கு அரிசி குடுக்காகளாண்டா மன பள்ளியில.. அதான் பாக்கப் போறன்..
அவருதான் டெலிகொப்டர்ல வர நேரமி;ல்லையாம் எண்டு குடுத்தனுப்பினயாம்...
வாரமாசம் வந்து கலியாணத்தையும் முடிச்சி என்ன கூட்டிட்டே போறயாம்...

கட்டில் செய்ய வாசல்ல தேக்க மரமிலுவா நாட்டச்செல்லி நான் நாட்டின..
இந்தப் பல்லும் செரியில்லயெண்டு தங்கப்பல்லுக் கட்டச் செல்லிரிக்காரு...
வாரமாசம் வந்து கலியாணத்தையும் முடிச்சி என்ன கூட்டிட்டே போறதானாம் 
மதுரோண்டியில செல்லி வெச்சிரிக்கன் அரைக்கயும் வேணுன்டா மன..
எண்ட அசரபுட போட்டோ பாத்தயா மன நீ??
கோட்டுப் போட்டு சந்திரிக்காவோட நிண்டு எடுத்தயாமெண்டு எனக்கு கடிதத்தோ வெச்சி அனுப்பிருந்தாரு.”

றகுமத்து அப்படியே இன்னமும் அஷ்ரப் கூட்டிட்டுப்போக வருவார் என்ற அபத்தமான காதலுடன் அஷ்ரப் இறந்துவிட்ட செய்தியையும் மனப்பிறழ்விலிருந்து வரும் உளறலாக நம்பி நடந்துகொண்டேயிருக்கிறாள்.
இருக்கிறவர்கள் அஷ்ரபின் பெயரையும் அவருடனான அனுபவத்தையும் பெருமிதமாகச் சொல்லி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இல்லாதவர்கள் அவருடைய பெயராலும் அவருக்கு மாற்றான கருத்தியல்களாலும் காலத்தைக் கடத்துகிறார்கள்.
முஸ்லிம் அரசியல் அடையாளம் என்ற வார்த்தை அஷ்ரபிலிருந்தே ஒரு திரண்ட சக்தியாக அரசியல் முறைமைக்குள் நுழையத் தொடங்கியதாலும் அது மட்டுமே இன்று வரை வடிவமாற்றங்களுடனும் மொழிப் பிறழ்வுகளுடனும் தொடர்ந்துகொண்டிருப்பதாலுமே இதை அஷ்ரபில் தொடங்கி அஷ்ரபில் முடிக்கவேண்டியாயிற்று.
வேறென்ன செய்யமுடியும் இனி அரசியலை என்பது சுபகு வரை தூங்காது இதை எழுதிய எனக்குள் விரக்தியாக மாறி தலையைப் பிய்த்துக்கொள்கிறேன்.   
எல்லோரும் பைத்தியம்போல தெரியத் தொடங்குகிறார்கள்.
‘அஷ்ரப் வருவார்.’
கை கால்களில் ஒரு கீறல் கூட இல்லாமல் ஓரத்துத் தலைமுடியும் தாடியும் முழுக்க வெள்ளையாகி
அதே மஞ்சள் கோட் அணிந்து அஷ்ரப் வருவார்.
“இது
மக்கான விடியலைநோக்கிய பயணம்;” என்று பேசத்தொடங்குவார்.

பாவம் உங்களுக்கு எனது அரசியல் புரியாமல் முழிக்கிறீர்கள் :)
 
அஷ்ரபிலிருந்து தொடங்கிய அத்தனையையும் நிற்பாட்டிப் பார்க்கலாம், 
சிலநேரம் அதற்காகத்தான் அவர் இன்னமும் வராமல் காத்திருக்கிறாரோ என்னமோ...
 
நானும் அஷ்ரபை/ மாபெருந் தலைவனைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன் இப்போது..
 
காதலால் மட்டும்தான் நம்பிக்கையோடு காத்திருக்க முடியும்.
 
றகுமத்தைப் பைத்தியம் என்பது போல என்னையும் பைத்தியம் என்றே அழையுங்கள்.
 
நான் தலைவருக்காகக் காத்திருக்கத் தொடங்குகிறேன்.
 
சுபஹுக்குப் போகும் நேரம் விழுந்த மழைத்தூரலுடன் “ நான் எனும் நீ “ யையும் “மரத்துக்கென்ன நிழலின்” சில வரிகளையும் நினைவுகளாகக் கரைத்துவிட்டேன்.
 
இன்னேரம் அவர் இப்படி ஏராளமாக எழுதி வைத்திருப்பார்,

.........................................................................................................................................................................................



Wednesday, 5 January 2011

மழையைப் பற்றி உளறுவதாக எண்ணி உன்னால் கைவிடப்பட்ட பிறகு

மழை தூறிக்கொண்டிருக்கிற இருள் உறைந்துபோய்க் கிடக்கிற
வானத்தில் இன்னும் நட்சத்திரங்கள் சில நம்பிக்கையோடு காத்திருக்கிற புதிய நாளாகிப்போனதை
அச்சத்தோடு எதிர்கொள்கிறேன்.
அச்சம் என்பது மழை உரப்பது அல்லது தூறாமல் விடுவது என்பதுதானா உனக்கு,
மிஞ்சிப் போனால் வீட்டு வராந்தை வரை வெள்ளம் ஏறுவது??

போடி மக்கு..
மழையின் நிறம் பற்றி அறியாமலா ஒவ்வொருநாளும் திட்டு வாங்கிக் கொண்டு நனைவதாகச் சொல்லுகிறாய்.
நீ எத்தி விளையாடும் தூறலிலிருந்து பிரியும் வானத்து நிறங்களை
உறிஞ்சியெடுத்ததைத்தான் முத்தம் முத்தமென்று அடிக்கடி புலம்புகிறதோ உனது புறங்கை
அதுவல்ல இது

இது சத்தில்லாத  நாட்களைப் பற்றியது, அவற்றுக்கு வண்ணம் பூசுவது பற்றியது
இறப்பின் கட்டியமாக இரட்டை நிறங்களோடு சாய்ந்து போகும்
பொழுதுகள் ஆரம்பமாகவும் முடிவாகவும் விதிக்கப்பட்ட ஏழை நாட்களைப் பற்றியது.
அதில் ஒன்று வெண்மை
(Frida வின் இடுப்பு முறிவு குணமாகிய போது
அவளால் வண்ணமாக தீட்டி முடிக்கப்பட்ட ஓவியமாக அது கழற்றியெடுக்கப்பட்டது,)
மற்றையது இருட்டு நிறம்
என்னுடைய அணியத் தேவையில்லாது போன பனிக்காலத்து அங்கியை நினைவுறுத்துகிறது.
நாளை மிகவும் சிறிய ஓவியமேயாதலால்
இப்போது தொடங்கினாலும் போதும்.
கொஞ்ச மழையின் நிறத்தாலேயே நிரப்பிவிடலாம்.
பசி மிகுதியால் நாட்கள் பாதியில் முறிந்துவிடும் அபாயமிருக்கிறது



( Frida and Leon Trotsky begin an affair, which forces the married Trotsky to leave the safety of his home.  - Wikipedia)

Saturday, 9 October 2010

சும்மா இருக்கும் நாட்களில் எழுதிப் பழகுதல்

நான் கவிதையெழுதப் போவதில்லை
நான் கவிதையே எழுதப் போவதில்லை
நான் கவிதையென்று எதையும் எழுதப் போவதில்லை

சூழ்ந்திருக்கும் வாழ்வின் மீது சற்று முன் அடித்த ரூம் ஸ்பிரேயின் வாசம்
வந்து அப்பிக்கொள்கிறது
மகிழ்ச்சி

நீண்ட மௌனத்துக்குப் பிறகான வார்த்தைகளென்றிருந்தவை
அர்த்தங்களில் கோட்டை விடுகின்றன

முடிவெடுக்கப்பட்ட அர்த்தங்களை இழப்பதே
வாழ்வாகுவதற்கான அடிப்படையென்றாகியது
துக்கம்

i do apologize for complaining

கார்ப்பட்டில் சிந்திவிடுகிற தேநீரின் மண்டியினை உடனேயே சுத்தப்படுத்திவிட வேண்டும்

இல்லை காலநிலைக்கு அடிமையாகி போர்வைக்குள்ளேயே மூழ்கி
நீண்ட காலங்களுக்கு இறந்து கிடக்க வேண்டும்

காத்துக்கொண்டிருத்தலின் நாட்களை இப்படியே ஒவ்வொன்றாகக் கடத்த முடியும்

போய்ச் சேரவேண்டிய இடம் - வாழ்வு
இருந்து வருகிற இடம் - வாழ்வு

தூக்கம் கலைந்து பார்க்கும் போது சிந்திய மண்டி என்பது அழியாத கறையென மாறியிருக்கும்